முற்றுகிறது சண்டை; சுபாஷ்கரனின் அந்தரங்கங்களை வெளியிடுவேன் என்கிறார் கருணாமூர்த்தி!

லைகா நிறுவனர் சுபாஷ்கரனின் அந்தரங்க தவறான செயல்பாடுகளை பொது வெளிக்கு விரைவில் கொண்டு வரும் நிலை ஏற்பாட்டுள்ளது என்று ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கோடிகளை சுருட்டிய ஐங்கரன் கருணாமூர்த்தி’ என்கிற லைக்கா நிறுவனத்தின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்து நீண்...ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஐங்கரன் கருணாமூர்த்தி . அந்த அறிக்கையில்,

“லைகா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்து படங்கள் தயாரித்து லாபகரமாக வினியோகம் செய்ய 32 வருடங்களுக்கு மேல் அனுபவமும், தொடர்புகளும் உடைய கருணாமூர்த்தி என்ற நான் தேவைப்பட்டது. நட்பின் அடிப்படையில் எனது ஐங்கரன் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளையும் நிறுத்தி விட்டு லைக்காவிற்குத் தோள் கொடுத்து முன்னணி நிறுவனமாக கொண்டுவர முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறேன்.
லைகா என்ற நிறுவனத்தின் எல்லா வகையான பணப் பரிவர்த்தனைகளும் டி.எல்.எஃப் என்ற கட்டிடத்தில் இயங்கும் திரு சுபாஷ்கரனின் இன்னொரு அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்து லண்டன் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்ற பின்பே அனைத்து செக் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளும் நடைபெற்றிருக்கின்றன. எனக்கு ஆயிரம் ரூபாய்க்குக் கூட செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை. எனவே திரு சுபாஷ்கரனுக்கோ அல்லது அவரது குழும கம்பெனி உறுப்பினர்களுக்கோ தெரியாமல் எந்த ஒரு பணப் பட்டுவாடாவும் நடந்ததில்லை.

எமன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, என்ற இரண்டு திரைப்படங்களின் மொத்த தயாரிப்புச் செலவு ரூபாய் 10 கோடிக்குள் தான் ஆனது. வெளிநாட்டு உரிமை என்பது படத்தின் தயாரிப்புச் செலவில் அதிக பட்சம் 15 சதவிகிதம் வரை மட்டுமே கிடைக்கும்.  அவ்வாறு கணக்கிட்டால் மேற்சொன்ன இரண்டு படங்களின் வெளிநாட்டு உரிமை அதிகபட்சம் ரூபாய் 1.50 கோடி தான் வரும். ஆனால் வெளிநாட்டு உரிமைகள் லைக்காவிடம் ரூபாய் 1.60 கோடி ஐங்கரன் வாங்கியது. மேற்சொன்ன இரண்டு படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு ரூபாய் பத்து கோடிக்குள் தான் எனும் பட்சத்தில் வெளிநாட்டு உரிமை மட்டும் எப்படி ரூபாய் 95 கோடிக்கு விற்றிருக்க முடியும்.
இதுவரை வெளிவந்த எத்தனையோ பெரிய படமாக இருந்தாலும் அது ரூபாய் 50 கோடிக்கும் குறைவாக தான் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டிருக்கிறது. இதனை அவர் முறையாக தயாரிப்பு நிறுவனத்தின் பேசி விவரம் அறிந்து கொள்ளலாம். சந்தை நிலவரம் எதுவும் முறையாக தெரியாதவர்கள் பேச்சை கேட்டு குற்றச்சாட்டை அள்ளி விடுகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. கத்தி திரைப்படத்தின் பிரச்சனைகள் அனைவரும் அறிந்ததே. லைகா என்ற பெயர் பொறித்த ஒரே காரணத்திற்காக படத்தை வெளியிட முடியாமல் நிறுத்தி வைக்கும் அளவிற்கு பிரச்சனை சென்றபின் என்னுடைய முயற்சியால் நல்லவிதமாக வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.
மேலும் லார்ட்ஸ் அண்ட் பர்ட்னர்ஸ் பிராபர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீஸஸ் என்ற கட்டிடத்துறையைச் சார்ந்த கம்பனிக்கு ரூபாய் 25 கோடி சுபாஷ்கரனுக்குத் தெரியாமல் கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார். ஏற்கனவே சொன்னது போல் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு கூட செக்கில் கையெழுத்திட உரிமையில்லாத நான் அவகளுக்குத் தெரியாமல் எப்படி 25 கோடி ரூபாயைக் கொடுத்திருக்க முடியும்? எந்த காரணத்துக்காக அந்த கட்டுமானத்துறைக்கு  ரூ 25 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார் என்று அவருக்கும்  அவரை சார்ந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்
வந்தா ராஜாவாகத் தான் வருவேன் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு திரைப்படங்களை அவருக்கு தெரியாமலேயே நான் ஆரம்பித்து நடப்பதாக குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். ஆனால் ஜனவரி 18 2019 அன்று இந்தியன் 2 திரைப்படத்தின் துவக்க விழாவுக்கு வந்திருந்த திரு.சுபாஷ்கரன் வந்திருந்தது தற்செயலா? அதுவும் லைகா தயாரிப்பு என்று பெயர் போட்டு பணம் கொடுத்தது எல்லாம் அவருக்கு தெரியாமல் தான் நடந்ததா?
வேடிக்கை என்னவென்றால் இப்போதும் இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவும் அவருக்கு தெரியாமல் தான் நடக்கிறதா?கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி என்னை அழைத்து மேற்சொன்ன வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தின் நஷ்டத்திற்கும் இந்தியன்2 என்ற திரைப்படத்தின் ஆரம்ப செலவிற்கும் வட்டியுடன் சேர்ந்து என்னிடம் ரூபாய் 13 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய் தொகையினை வற்புறுத்தி என்னை ஏற்றுக் கொள்ளச் செய்தனர்.
அந்த இடத்தில் எனக்கு வேறு வழி தெரியாததால் நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் அதன் பின்பு அவர்களின் வேறு வகையிலான அனைத்து நஷ்டங்களையும் என் தலையில் கட்ட பார்க்கும் சூழ்நிலையை உணர்ந்தேன். எனவே நான் இனியும் அந்த லைக்கா நிறுவனத்தில் தொடர்வதில் எந்த மரியாதையும் இல்லை என்ற காரணத்தாலும் சுபாஷ்கரன் மற்றும் அவருடன் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்னிடம் ஐங்கரன் நிறுவனத்தின் மூலம் எந்த புதிய படங்களும் தயாரிக்க வேண்டாம் வெளிநாட்டு உரிமைகளை வாங்கி வியாபாரம் செய்ய வேண்டாம் என்றும் அதற்கு ஈடாக லைக்கா நிறுவனத்தின் லாபத்தில் பங்கு என்ற வாய்மொழி ஒப்பந்தத்தை கொடுத்து, அதனைச் சிறிதும்  இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலும் நான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தேன்.

நான் 32 வருடங்களுக்கு மேல் போராடி தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக உருவாகியிருக்கிறேன். எனது ஐங்கரன் நிறுவனத்தின் மூலம் இதுவரை இதுவரை 14 நேரடி தமிழ்ப் படங்களை தயாரித்தும் 24 படங்களை முதல் பிரதி அடிப்படையில் வாங்கி வெளியிடும் 500 படங்களுக்கு மேல் ஆடியோ உரிமையை வாங்கி வெளியிட்டும் 2 ஆயிரம் படங்களுக்கு மேல் வெளிநாட்டு உரிமையை வாங்கி வெளியிட்டும் எனது வியாபார சந்தையை விரிவாக்கி இருக்கிறேன்.
திரு சுபாஷ்கரன் குறிப்பிட்டது போல் நான் இந்த துறைக்கு புதிய ஆள் அல்ல. கம்பெனி என்று எதுவும் இல்லாமல் வேறு நிறுவனத்தில் வேலை மட்டும் செய்த ஆளும் அல்ல. லைக்காவில் இணைந்த பிறகு தான் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதையும் பிசினெஸ் கிளாஸில் பயணிப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். கடந்த 30 வருடங்களாக உலகமெங்கும் பிசினெஸ் கிளாஸில் தான் பயணித்து வருகிறேன் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் இதுவரை தங்கி வருகிறேன்.
தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக பெரிய படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்க எந்திரன் என்ற திரைப்படத்தை தயாரிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் திரு. விஜய் (வில்லு) திரு. அஜித் (ஏகன்)  திரு. ஜெயம் ரவி (பேராண்மை), திரு.ஆர்யா (சர்வம்),  தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த அங்காடி தெரு இயக்குநர் வசந்தபாலன் முறையே முக்கிய கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்களை வைத்து புதிய படங்களை தயாரித்தேன். மேற்கண்ட அனைத்து படங்களும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தமிழ் திரையுலக சரித்திரத்தில் இந்த முயற்சியை பெரிய மைல் கல்லாக பார்க்கப்பட்டது. இந்த சரித்திர சாதனையை கொண்டவன் நான்.
சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த குற்றச்சாட்டில் திரு சுபாஷ்கரன் என் பெயரை பாழ் படுத்தும் நோக்கம் மட்டுமே பிரதானமாக இருப்பதாகப் படுகிறது. மேலும், என் அலுவலகத்தில் பலர் வேலை செய்கிறார்கள். அதில் திருமதி பானு என்பவரின் பெயரைத் தேவையில்லாமல் இழுத்து என்னையும் மற்றும் ஐங்கரன் நிறுவனத்தின் பெயரையும் களங்கப்படுத்தி இருக்கிறார்.
எனது உதவி தான் அவருக்குத் தேவைப்பட்டதேயொழிய, அவரது உதவி எனக்கு பெரிய அளவில் தேவைப்படவில்லை. எனது பூர்வீகம் குடியிருக்கும் விபரங்கள், கம்பெனி விவரம் கொடுத்திருக்கும் அவரும் என்னைப் போலவே இலங்கையைச் சேர்ந்தவர். இங்கிலாந்து  குடியுரிமை கொண்டவர் மற்றும் இந்தியாவில் கம்பெனி ஆரம்பித்து நடத்துபவர். அவர் ஒன்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து தொழில் செய்பவர் அல்ல.
திரு.சுபாஷ்கரன் என்னை சுரண்டல் பேர்வழி என்று குற்றச்சாட்டு கூறி மிகவும் தரக்குறைவாகவும், பெயரை பாழ்படுத்துமாறும் கடிதம் கொடுத்துள்ளார்.  ஆனால், நான் அவரது அளவிற்கு தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை. நான் எப்போதுமே சட்டத்தை மதிப்பவன். சட்ட ரீதியில் அவரது குற்றச்சாட்டை எதிர்கொள்வேன். அதேநேரம், திரு. சுபாஷ்கரனின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால், அவரது தவறான செயல்பாடுகளை பொது வெளிக்கு விரைவில் கொண்டு வரும் சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளேன் என்பதையும்  இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

No comments