நெடுந்தீவு அபிவிருத்திக்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபா
நாம் ஆட்சிக்கு வந்து 20 மாத காலங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் , ஊழல், இனவாதம் என்பவற்றை கூட பெருமளவில் ஒழித்துள்ளோம். இன்னமும் மிகுதி 40 மாதங்களில் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் , உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
நெடுந்தீவில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை தேசிய மக்கள் சக்தியினர் ஆகிய நாம் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றோம்.
நெடுந்தீவின் அபிவிருத்தி பணிகளுக்கு என 1500 தொடக்கம் 2000 ஆயிரம் மில்லியன் ரூபாய் வரையில் எமது அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.
நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் பிரச்சனையை தீர்க்கும் முகமாக இங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நிறுவ நாம் கோரிய போது ம் எவ்விதமான இலாப நோக்கமும் இன்றி பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினர் சம்மதித்தனர்.
இன்று அதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை நவம்பர் மாதம் முடிக்கவே திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தக்காரர்களிடம் இந்தனை செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்குள் முடிக்குமாறு நான் கோரியுள்ளேன்.
கட்டட பணிகளுக்கு தேவையா பொருட்கள் , சேவைகள் மற்றும் உதவிகளை கடற்படையினரும் பிரதேச செயலகமும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் ,விரைவில் பணிகளை முடித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தை மக்களிடம் கையளிக்க வேண்டும் என அவர்களிடமும் கூறியுள்ளேன்
நெடுந்தீவு மக்களின் அபிவிருத்தி விடயத்தில் தேசிய மக்கள் சக்தியினர் கவனம் செலுத்தியுள்ளனர். அதனால் தான் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் சுகாதார அமைச்சர் , எரிசக்தி அமைச்சர் வருகை தந்து அவர்கள் துறை சார் அபிவிருத்தி விடயங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர், இன்று போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சராகிய நானும் கடற்தொழில் அமைச்சரான இராமலிங்கம் சந்திர சேகரரும் வருகை தந்துள்ளோம்.
இங்கு நாம் அரசியலுக்காக வரவில்லை. இங்கே எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் ? நாம் வாக்குகளை நோக்கமாக கொண்டு இங்கு வருகை தரவில்லை.
இந்த நெடுந்தீவு மக்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் , அத்துடன் சுற்றுலாத்துறை , மீன் பிடித்துறை உள்ளிட்ட ஏனைய துறைகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.
எமக்கு 60 மாத காலத்திற்கு மக்கள் அதிகாரத்தை தந்துள்ளனர். அதில் தற்போது 20 மாதங்கள் முடிவடைந்துள்ளது இந்த 20 மாதங்களுக்குள் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளோம். இனவாத, மதவாதங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊழல் வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றினை மக்களும் உணர்ந்து கொண்டு இருப்பார்கள் என நம்புகின்றோம்
வடக்கு - தெற்கு இடையில் 75 வருடங்களுக்கு மேலாக அரசியல்வாதிகள் முரண்பாடுகளை ஏற்படுத்தி இருந்தனர் அதனால் இரத்த ஆறு ஓடியது. அவ்வாறு மீண்டுமொரு இரத்த ஆறு ஓட எமது அரசாங்கம் அனுமதிக்காது. அதேபோல் மக்களும் மீண்டும் இனவாதிகளுக்கு இடமளிக்க கூடாது.
அந்த வகையில் எமது அரசாங்கத்திற்கான ஆதரவை நெடுந்தீவு மக்களும் தொடர்ந்து வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நாம் இந்த மக்களுடன் தொடர்ந்தும் பயணிப்போம் என தெரிவித்தார்.

Post a Comment