நீர்கொழும்பு தாக்குதலின் பின்னணியில் ரணில்!
ஈஸ்டர் தாக்குதல் பாணியிலான நீர்கொழும்பு சிறைச்சாலை தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் அரச புலனாய்வு கட்டமைப்பு எச்சரித்துள்ளது.சம நேரத்தில் மூன்று சிறைகளில் குழப்பங்களை ஏற்படுத்தவும் சுமார் 600 வரையில் கொலை செய்யவும் திட்டமிட்டிருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் மேற்கொண்ட லண்டன் பயணத்தின் மூலம் அரசிற்கு 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நஸ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
ஜனாதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு மேற்கொண்ட பயணம் ஒரு தனிப்பட்ட பயணமாகக் கருதப்படுகிறது. அந்தப் பயணத்திற்காக அரச நிதியிலிருந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டதன் மூலம் அரசிற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த வழக்கை செப்டம்பர் 30-ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில் தனது தண்டனை மற்றும் தனது சக முன்னாள் அமைச்சர்கள் பாதாள உலககும்பலுடன் தொடர்புபட்டநிலையில் கைதாகிவருவதையடுத்தே ஆட்சி கவிழ்ப்பிற்கு சிறை கலவரங்களை ரணில் தூண்ட முற்பட்டதாக தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, தனது பதவியிலிருந்து விலகுமாறு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் வந்தபோதிலும், அத்தகைய அழுத்தத்திற்குப் பணிந்து தாம் பதவி விலகப் போவதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் மட்டுமே தன்னை அப்பதவியிலிருந்து நீக்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Post a Comment