தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிருங்கள் - சீ.வீ.கே வேண்டுகோள்
சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கற்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி நலன் கருதியும் தமிழின நலன் கருதியும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பில்,
1949இல் உருவாக்கப்பட்ட எமது முன்னோடிகளின் அர்ப்பணிப்புகள் மற்றும் அவர்களின் தியாகங்களினால் இன்று வரை உயிர்ப்புடன் அரசியல் இலக்கு பற்றுடன் செயற்பட்டு வருகிற ஒரேயொரு கட்சியாக செயற்பட்டு வருகிறது.
ஆரம்ப முதல் கட்சியை பிளவுபடுத்தி அழித்து விடும் முயற்சிகள் தொடர்ந்தாலும் அவற்றை எல்லாம் ஒற்றுமையாக எதிர்த்து வெற்றி கண்டுள்ளோம். இலங்கைத் தமிழர்களின் இனத்துவ மற்றும் நிலத்துவ உணர்வுகளை தளர்வின்றி முன்னெடுக்கும் தனித்துவமான ஒரேயொரு கட்சி நாங்கள்தான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
தென்னிலங்கை இனவாத அரசியலை எதிர்த்து தமிழின காப்பரணாக இருக்கும் எமது கட்சியை உடைத்து சிதைத்து அழித்துவிட பலமான ஊடுருவல்கள் இடம் பெறுவதை நாம் பார்க்கிறோம்.
இந்த நிலையில் எமது கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம் இது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். அண்மைக் காலமாக எமது கட்சியின் உள்விவகாரங்கள் பொது வெளியில் பேசப்பட்டு வருவது நமது எதிரிகளுக்கு வாய்பளிப்பதை நீங்கள் உணராதவர்கள் அல்ல என்பதை நான் அறிவேன்.
எனவே இந்த சித்திரை புத்தாண்டில் இருந்து எமது கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கர்ப்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி நலன் கருதியும் தமிழின நலன் கருதியும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன் - என்றுள்ளது.
Post a Comment