யாழ்.பல்கலை விரிவுரையாளர் படுகொலை ; மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் , விரிவுரையாளரின் சடலம் , சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க பகுதிக்குள் மீட்கப்பட்டமையால் , மரண விசாரணைகள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , அது தொடர்பிலான விசாரணை அறிக்கை நேற்றைய தினம் வரையில் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை முதலாம் சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி , தனது தரப்பினர் தொடர்பில் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், எனவே நீதிமன்றுக்கு செய்தி சேகரிக்க வரும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என மன்றில் கோரினார்.
கடந்த வழக்கு தவணையின் போது , ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் , எனவே தவறான செய்திகள் வெளியானால் , அது தொடர்பில் மன்றுக்கு முறையிடுமாறு மன்று தெரிவித்தது.
அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மன்று , அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

Post a Comment