விதை உருளை கிழங்கு:விடாப்பிடி
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இலங்கை அரசினால் யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்ட விதை உருளை கிழங்கு தவறாக களஞ்சியப்படுத்தப்பட்டமையாலேயே பழுதடைந்ததாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில், மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்; மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றிருந்தது.
யாழ் மாவட்ட விவசாயிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கில் பற்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் வட மாகாண பிரதி பணிப்பாளரிடம், ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கேள்விகளை முன்வைத்திருந்தார்.
எவ்வித தரச் சான்றிதழும் இன்றி குப்பிளான் களஞ்சியசாலைக்கு விதை உருளை கிழங்குகள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன, இதற்கான அனுமதியை வழங்கியது யார்?, தற்போது அவற்றை அழிப்பதற்குரிய செலவுகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மாற்று செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கேள்விகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் விதை உருளைகிழங்கு இறக்குமதியில் மோசடிகள் இடம்பெற்றிருக்க கூடும் என்பதால் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை விவசாய அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட விசாரணைக்குழு களஞ்சியப்படுத்தப்பட்ட இடத்தில் தவறுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
Post a Comment