அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் கூத்திற்கு கிடுக்கி!

 


இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக தமிழர்களின் தலைகளை வெட்டப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த அம்பிட்டிய சுமணரத்ன தேரரை விசாரணைக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

வீதியில் நின்று வன்முறையாக செயற்பட்டு ஊடகங்கள் ஊடாக தமிழர்களின் தலைகளை வெட்டப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தேரருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை ஒப்படைக்குமாறு நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.அதன் பிரகாரம் எதிர்வரும் 20 ம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.


கடந்த 25ம் திகதி புதன்கிழமை குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து வீதியால் சத்தமாக தெற்கிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலையை வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.

இந்நிலையில், இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இந்த தேரரின் செயற்பாட்டை கண்டித்தது அவருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகன் ஏறாவூர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர்கள் தொடர் விசாரணையின் பின்னர் தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்த மோகனை பிரதிவாதியாக குறிப்பிட்டு தேரருக்கு எதிராக இன்று வழக்கு தாக்குதல் செய்யப்படடிருந்தது.


No comments