வடக்கில் தடையில்லை!



தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி இலங்கை காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வவுனியாவை தொடர்ந்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி கடந்த திங்கட்கிழமை (18) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு காவல்துறையினர் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளதென தெரிவித்து. நடத்தப்படும் பேரணியை  தடை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை (20) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அதன்போது இவ் வழக்கை நீதவான் நீதிமன்ற நீதவான் தள்ளுபடி செய்தார்.

ஏற்கனவே வவுனியா நீதிமன்றமும் தடை விதிக்க கோரிய மனுவை நிராகரித்திருந்த நிலையில் வாகன ஊர்தி முல்லைதீவை சென்றடைந்துள்ளது.

குறித்த ஊர்தியே திருகோணமலையில் வைத்து தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments