பிணை கிடைத்தது:குவியும் பிக்குகள்!

 


வலிகாமம் வடக்கின் தையிட்டியில் தமிழ் தரப்புக்களது போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் தையிட்டிக்கு நூற்றுக்கணக்கில் பிக்குகள் படையெடுத்துள்ளனர்.இராணுவ பாதுகாப்புடன் இன்று பல பேரூந்துக்களில் பௌத்த பிக்குக்கள் தையிட்டியில் குவிந்துவருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்னம் சுகாஸ் உள்ளிட்ட 9 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட போது, போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்ததாக தெரிவித்து, காவல்துறையினர், போராட்டக்காரர்களை கைது செய்ததோடு நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை பலவந்தமாக தூக்கிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட 9 பேரையும் காவல்துறையினர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க காவல்துறையினர் கோரிய போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் அதை எதிர்த்தனர்.வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, கைதானவர்களை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை தடுக்க முடியாதென்றும் உத்தரவிட்டுள்ளது.


No comments