அம்மன் விடமாட்டார்:சிவி



யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள நயினைநாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி இலங்கை காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, மற்றும்  அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கு தொடர்பில் காவல்துறையின்; வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்கு உட்படுத்தி நீண்ட சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் எழுத்துமூல சமர்ப்பணங்களுக்காக  வழக்கு மே மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படடுள்ளது.

இதனிடையே நாட்டில் உள்ள அனைவருக்கும் சட்டம் சமன், காவல்துறையினர் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம், பண்ணையில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன் சிலை, உரிய அனுமதிகள் பெறாது அமைக்கப்பட்டதாக தெரிவித்து ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

நாகபூசணிக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு கொடுத்தவர் எவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில் இருப்பாரோ தெரியவில்லை.

அவரது முறைப்பாட்டை காவல்துறையினர் ஏற்றது பிரச்சினை இல்லை. அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், யாழ் மாவட்டத்தில் உரிய முறையில் அனுமதி பெற்றா வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படுகின்றன என்பதை காவல்துறையினரிடம் கேட்க விரும்புகிறேன்.

அவ்வாறு முறைப்பாடு வழங்கியவர் யார் என்பது இதுவரை வெளிவராத நிலையில் பெரும்பாலும் முறைப்பாட்டை வழங்கியவர் யாழ்ப்பாணத்தை விட்டு விரைவில் வெளியேறுவார் போல தெரிகிறது” எனவும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments