சமூக பிரிவை சுட்டிக்காட்டி பேசியதால் கொலை செய்தேன் - அத்தியடி பெண் கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!


சமூக பிரிவை கூறி தன்னை இழிவாக பேசியமையால் ,ஆத்திரத்தில் பெண்ணை கொலை செய்தேன் என அத்தியடி பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார். 

யாழ்ப்பாணம் அத்தியடி பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த 12ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார். 

அது குறித்து யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வந்த விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணை படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , 

" தனக்கும் குறித்த பெண்ணும் இடையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு தொடர்ந்து வந்தது. நாவற்குழி பகுதியில் இருந்து அத்தியடி பகுதிக்கு அவர்கள் வீடு மாறுவதற்கு உள்ளிட்ட , பல உதவிகளை செய்து வந்தேன். அண்மையில் கூட அவர்களுக்கு சொந்தமான காணி ஒன்றினை ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்று அவர்களிடம் பணத்தினை கையளித்தும் இருந்தேன். 

சம்பவ தினத்தன்று அவர்களின் வீட்டுக்கு சென்ற வேளை என்னை தண்ணீர் குழாய் ஒன்றினை புதைப்பதற்கு கிடங்கு வெட்டுமாறு கூறினார். 

நான் கூலி வேலைகள் செய்வதில்லை. அது என் வீட்டாருக்கு தெரிந்தால் , பிரச்சனை ஆகும். கூலிக்கு வேறு நபர்களை பிடித்து தருகிறேன் என கூறினேன். 

அதற்கு அவர் என்னை எனது சமூகத்தை சுட்டிக்காட்டி கேவலமாக பேசினார். அதனால் ஆத்திரத்தில் கட்டையால் அவரை தாக்கினேன். அவர் உயிரிழந்து விட்டார் " என பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார். 

சந்தேகநபரை தொடர்ந்து பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments