மல்லிகைத்தீவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்!

அமெரிக்க தூதரக பின்னணியில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை பெற்றுத்தருமாறு வழியுறுத்தி, மூதூர் - மல்லிகைத்தீவு  பகுதியில் நேற்று திங்கட்கிழமை  (12) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

"100 நாள் செயல்முனைவு " எனும் திட்டத்தின்கீழ், ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் 43ஆவது நாளாக மூதூர் - மல்லிகைத்தீவு  பகுதியில் நேற்று இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில், பெண்கள் அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டவர்கள், “அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்”,  “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை”, “ஒன்றுகூடுவது எங்கள் உரிமை” மற்றும் “அரசியல் உரிமை எமக்கு வேண்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதோடு, சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது கருத்துரைத்த போராட்டக்காரர்கள், சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

அத்தோடு, மக்களுக்கு போராடும் தமது அலுவலகம் தாக்கப்படுவதாகவும், போராட்டத்தில் ஈடுபடுவோரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் செயற்பாடு இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தினர். இதெற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் தீர்வுதான் எனவும் கூறினர்.

No comments