உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு


கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.  

அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். 

இதுகுறித்து கஜேந்திரகுமார் தெரிவிக்கையில்:-

சந்திப்பின்போது, 13 அரசியல் கைதிகள் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது இதுவரையில் எவ்விதமான வழக்குகளும் தொடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பில் விசேட கவனத்தினை உடன் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆகக்குறைந்தது அவர்கள் மீதான வழக்குகள் தொடுக்கப்பட்டாலே அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அவர்கள் எவ்விதமான குற்றங்களும் செய்யாத நிலையில் சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டு இவ்வளவு நாட்களும் நீதிமன்றில் முற்படுத்தப்படாது உள்ளனர் என்று எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் தரப்பில், கடந்த வழக்கு தவணைக்குப் பின்னர் 13பேரில் 11பேர் தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு, இந்த விடயங்கள் அரசியல் கைதிகளுக்கு தெரியாது இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டது. 

எனினும். 13அரசியல் கைதிகள் கடந்த 4வருடங்களாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பிணை அனுமதிகளை வழங்க வேண்டும் கோரப்பட்டுள்ளது. 

குறிப்பாக அந்தந்த சட்டத்தரணிகள் ஊடாக இந்தக்கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போது சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினோம். எனினும் அதற்கு உரிய உறுதிப்பாடுகள் எவையும் வழங்கப்படவில்லை. 

இதனைவிடவும், ஏற்கனவே சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 33அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரினோம்.

அத்துடன் 22பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரியிருந்தோம். அதன்போது 33பேரின் பிணை தொடர்பில் பரிசீலிக்கலாம் என்று சட்டமா அதிபர் தரப்பில் தெரிவித்தாலும் உறுதிப்பாடுகளை வழங்கவில்லை. 22பேரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம், 33பேருக்கு பிணை அனுமதி தொடர்பில் சட்டமா அதிபர் தரப்பு உறுதிப்பாடுகளை வழங்காமைக்கு, அவர்கள் முக்கியமானவர்களின் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்களுக்கு பிணை அளிப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்ற அச்சமே பிரதான விடயமாக இருப்பது சந்திப்பின்போது உணரப்பட்டது. இதன்போது, நாம் வெறுமனே சட்டமா அதிபர் திணைக்களத்தின் அச்சத்திற்காக நீண்டகாலம் இளைஞர்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கமுடியாது என்பதை ஆணித்தனமாக கூறினோம் என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

No comments