யாழில் பாணின் விலை அதிகரிக்காது:அறிவிப்பு



யாழில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை. அதனையும் மீறி பாணினின் விலையை அதிகரித்தால், வெதுப்பக உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பாக உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார் .

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . 

மேலும் தெரிவித்ததாவது ; யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களுக்கு, பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா வழங்கப்படுகிறது . அது தொடர்ச்சியாக வழங்கப்படும் . அதன் விலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.12 ஆயிரத்து 500 ரூபாவிற்கு பிறீமா நிறுவனத்தினரால் எமக்கு மா வழங்கப்படுகின்றது .


இந்நிலையில்,  கொழும்பில் பாணின் விலை உயர்த்தப்படுவதற்காக யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை . 


எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 200 ரூபாய்க்கு மேல் பாணின் விலையினை அதிகரிக்க தேவையில்லை . அவ்வாறு யாராவது பாணின் விலையினை அதிகரித்து விற்றால் அவர்களுக்குரிய எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுவதற்கான சலுகைகள் நீக்கப்படக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன .


யாழ்.மாவட்ட செயலரின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் பாணின் விலை தொடர்பில் கண்காணிப்பார்கள். அவ்வாறு கண்காணித்து அதிக விலைக்கு பாண் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சலுகைகள் நிறுத்தப்படக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளன .


 வெதுப்பக உரிமையாளர்கள் யாருக்காவது கோதுமை மா தேவைப்பட்டால் எமது சங்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்குரிய மாவினை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக் கொடுக்க முடியும் . அதனால் அதிக விலைக்கு பாணினை விற்க வேண்டிய தேவை இல்லை - என்றார் .

No comments