ரிஷி சுனக் 2வது சுற்றிலும் முன்னிலை!


இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில் ரிஷி சுனக் 88 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல்சுற்று வாக்குப்பதிவை 8 வேட்பாளர்கள் எதிர்கொண்ட நிலையில் 2 பேர் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.

அந்த வகையில் ரிஷி சுனக் உட்பட 6 வேட்பாளர்கள் நேற்று 2 வது சுற்று வாக்குப்பதிவை எதிர்கொண்டனர். இதில் ரிஷி சுனக் 101 வாக்குளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அட்டர்னி ஜெனரல் சூவெல்லா பிரேவர்மன் 27 வாக்குகளை மட்டுமே பெற்றதால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 3 வது சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த முடிந்த முதல் சுற்று வாக்குப்பதிவு கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் 88 வாக்குகள் பெற்ற ரிஷி சுனக் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

வர்த்தக மந்திரி பென்னி மொர்டான்ட் (67 வாக்குகள்), வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் (50), முன்னாள் மந்திரி கெமி படனாக் (40), டாம் டுகெந்தாட் (38) அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.

அதேநேரம் மற்றொரு இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவா்மன் 32 வாக்குகள் பெற்று மயிரிழையில் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றிருந்தார்.

இறுதிச்சுற்றில் போட்டியிடும் இருவரில் ஒருவரை கட்சியின் சுமாா் 2 லட்சம் உறுப்பினா்கள் தபால் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுப்பா். அவரே கட்சி தலைவராகவும் பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவாா்.

No comments