தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு


யேர்மனி நாட்டின் லூடென்சைட் நகரப்பொறுப்பாளராகக் கடமையாற்றிய தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள், 02.06.2022 அன்று ஊர்தி விபத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

1987ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழத் தேசியத்தலைவரையும் நேசித்துத் தேசியச்செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக்கொண்டு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் லூடென்சைட் கோட்டப்பொறுப்பாளராக தேசப்பணியாற்றியவராவார்.

அனைவராலும் பரா அண்ணர் என அன்பாக அழைக்கப்பட்ட தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னரும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் மாவீரர்களின் இலட்சியப் பாதையில் மக்களுடனும் செயற்பாட்டாளர்களுடனும் நல்லுறவைப் பேணி தமிழீழ விடுதலைக்காக உறுதியுடன் உழைத்தவராவார்.

தாயக விடுதலைப்பணியோடு மட்டும் நின்றுவிடாது, 2015 ஆம் ஆண்டிலிருந்து எமது தாய்மொழியாகிய தமிழ்மொழியை எமது இளந்தலைமுறையினருக்கு ஊட்டுவதிலும் அதனை மேம்படுத்தி வளர்க்கும் நோக்குடனும் லூடென்சைட் தமிழாலய நிர்வாகியாக இறுதிநாள் வரை கடமையாற்றிவந்தவராவார்.

இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.


No comments