வெளிவருகிறது அகோரன்-2!



இலங்கை-இந்திய தமிழ் கலைஞர்களது கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள அகோரன்-2 திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது.

இலங்கையின் வடமாகாணத்தை சேர்ந்த கலைஞர்களது நடிப்பிலும் இசை அமைப்பிலும் உருவாகி இந்திய முன்னணி கலைஞர்களது செம்மைப்படுத்தலிலும் அகோரன்-2 வெளிவரவுள்ளது.

இதனிடையே எதிர்வரும் ஜீலை மாதம் இலங்கை மற்றும் இந்திய திரையரங்குகளில் அகோரன்-2 திரைப்படம் வெளியாகுமென இயக்குநர் யேசுதாசன் அஜிதன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட இயக்குநர் யேசுதாசன் அஜிதன் இந்திய தமிழக திரைப்படங்களை கொண்டாடுகின்ற மனோநிலை இலங்கை தமிழ் மக்களிடம் குறைவாகவே காணப்படுவதாக தெரிவித்தார்.

உண்மையில் எமது மக்கள் வழங்கும் ஆதரவே நிச்சயமாக எம்போன்றவர்களை ஊக்குவிக்குமெனவும் தெரிவித்தார்.

சிலர் தாயக அவலங்களை கதை மையமாக கொண்ட திரைப்படங்களை தயாரிக்க ஆலோசனை சொல்கின்றனர்.

உண்மையில் அவ்வாறான திரைப்படங்களும் வரவேண்டும்.ஆனால் அவை புலம்பெயர் நாடுகளிலேயே வரவேற்பை பெறுகின்றன.

ஆனால் தென்னிந்திய பாணி திரைப்படங்களே அனைத்து மக்களையும் கவர்கின்றன.அதனாலேயே திரில்லர் பாணியிலான அகோரன்-2 படத்தை தயாரித்துள்ளோம்.

ஒரு இரவினுள் நடந்து முடிவது போன்ற கதையென்பதால் போதிய துறைசார்ந்த கமராக்கள் கூட இன்றியே படப்பிடிப்பை மேற்கொண்டிருந்ததாகவும் திரைப்படகுழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயக்குநர் மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. 


No comments