மைத்திரியை உள்ளே தள்ள முயற்சி!



மீண்டும் அரசியல் அரங்கில் முனைப்பு காட்டிவரும் மைத்திரியை முடக்க ராஜபக்ச தரப்பு வேகம் காட்டத்தொடங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக இவ்வாறு கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரைகளை அமுல்படுத்தவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பலரும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, அரசாங்கத்தை தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் மைத்திரியை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இதன்படி, மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments