ஞாயிறு முதல் பொதுமக்களிற்கு யாழில் ஊசி!



நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ் மாவட்டத்தில் ஏற்றப்படவுள்ள கொவிட்  – 19 நோய்கெதிரான தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொவிட்  – 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 50,000 சீனத் தயாரிப்பான சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட்  – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம சேவையாளர் பிரிவுகளில் நாளை  (ஞாயிற்றுக்கிழமை – 30.05.2021) முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும். தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.

மேற்படி கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவு மக்களுக்கு அப் பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினாலும், பிரதேச செயலகத்தாலும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு  வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மக்கள் பதிவு செய்துள்ள கிராம சேவகர் பிரிவு தவிர்ந்த வேறு பிரிவுகளில் தடுப்பூசியைப் பெறமுடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். குறித்த தினத்தில் தடுப்பூசியினை பெறத்தவறின் பிறிதொரு தினத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமங்களினை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments