இந்திய அரசு கொடுக்கும் ஊக்கத்தினால் சிங்கள கடற்படை அட்டூழியம் தொடர்கிறது!


இலங்கை கடற்படையின் அராஜகத்தால் தமிழகத்தைச் சார்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர் . இதனை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை ,

கடந்த ஜனவரி 18ஆம் தேதி, நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது, இலங்கைக் கடற்படை வேகமாக வந்து மோதி நொறுக்கி மூழ்கடித்தது. உயிருக்குத் தத்தளித்த மீனவர்களை, மற்ற மீனவர்கள் வந்து காப்பாற்ற விடாமல் தாக்கி விரட்டி அடித்தது. கடலில் தத்தளித்த மீனவர்கள் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்தனர். இறந்த 4 மீனவர்களின் உடல்கள் தற்போது இலங்கை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை உடனே தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து இங்கே உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும்.இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு, இந்திய அரசு கொடுத்து வருகின்ற ஊக்கத்தினால் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து வேட்டையாடிக் கொன்று வருகின்றது.கடந்த 35 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, சிங்களக் கடற்படை கொன்று இருக்கின்றது.இந்திய அரசைப் பற்றிய அச்சமோ கவலையோ துளியளவும் சிங்கள அரசுக்கு கிடையாது.

சிங்கள இனவெறி அரசையும், அவர்களை ஊக்குவித்து வருகின்ற இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரேந்திர மோடி அரசையும் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஜனவரி 25 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.தோழமைக் கட்சித் தலைவர்களும்,தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பெருமளவில் திரண்டு வந்து கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என வைகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments