நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அமைதியின்மை - இருவர் உயிரிழப்பு ; 20 பேர் படுகாயம்


நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 20 கைதிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையினுள் ஏற்பட்ட இந்த மோதலைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்ற நிலைமை உருவானது. 

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாகக் களம் இறங்கி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

மோதலுக்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸின் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சமரசத்திற்கு கொண்டுவரப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments