கைதான இந்திய மீனவருக்கு கொரோனா?

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் 9 பேர் கடந்த 10 நாள்களாக ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில்; ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளார். ஏனையோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுவர்.

இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் மேலும் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் அங்கொடையிலிருந்து வருகை தந்து இரணைமடு வீதிப் புனரமைப்புப் பணிக்குழாமின் சாரதியாகப் பணியாற்றுபவர்.

மற்றையவர் வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர். அவர் காய்ச்சல் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு சென்ற போது மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கையில் இன்று ஒரேநாளில் 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மினுவாங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.


No comments