ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்க அனைத்து தகவலும் இருந்தது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை இலகுவாக முறியடித்திருக்க முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலின் 1ம் ஆண்டு நினைவேந்தல் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

இந்த பயங்கரவாத தாக்குதல் ஆசியாவில் மாத்திரமன்றி, உலக மட்டத்திலும் சிவில் பிரஜைகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் ஆகும். அது சர்வதேசத்தின் நினைவுகளில் உள்ள 1995 டோக்கியோ நகர விஷ வாயுத் தாக்குதல், 1995 ஒக்லஹோமா குண்டுத் தாக்குதல், 2005 லண்டன் குண்டுத் தாக்குதல், 2008 மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களின் போது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போன்றளவு சேதங்கள் ஏற்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த ஒருவர் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக உயிருக்காகப் போராடி அண்மையில் மரணத்தைத் தழுவினார். காயமடைந்த சிலர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இலங்கையருக்கு தற்கொலைத் தாக்குதல்கள் என்பது புதிய ஒன்றல்ல. எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பிரிவினைவாதத்திற்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலப் பகுதியில் நாம் கண்ட தாக்குதல்களை விடவும் வித்தியாசமானதாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் திகதி, இலக்கான இடங்கள், பங்குபற்றிய பயங்கரவாதிகளின் பெயர்கள், முகவரிகள், அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் கூட எமது நட்பு நாடொன்றின் உளவுப் பிரிவினரால் முன்கூட்டியே அப்போது ஆட்சியிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. அதனால் இந்தத் தாக்குதலை இலகுவாகத் தடுத்திருக்க முடியும்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் மரணித்த, காயமடைந்த, அங்கவீன நிலைமைக்கு உட்பட்ட அனைவரையும், தாம் பின்பற்றும் சமயத்திற்கு ஏற்ப நினைவுபடுத்துமாறு நான் அனைத்து இலங்கையரிடமும் வேண்டிக்கொள்கிறேன். - என்றுள்ளார்.

No comments