கூட்டமைப்புடன் பேசி தீர்வு பெற முடியாது- வாசு கண்டுபிடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்றையதினம் (16) கட்சியின் யாழ் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை றஜீவ் ஆகிய இருவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு பத்திரத்தில் கையப்பமிட்டுள்ளனர்.

இதனையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய வாசுதேவ நாணயக்கார,

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாது. தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். தவிர நாங்கள் எந்த விதத்திலும் தமிழ் மக்களுக்கு தீர்வினைப் பெற்றுத் தர முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. எனினும் நாங்கள் தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். அதற்காக தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலமே தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் - என்றார்.

No comments