பாக் உளவாளி அருண்?; இந்தியாவில் சிறை

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கை முன்னெடுக்க பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜ் என்ற நபருக்கு இந்தியா - சென்னை சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், 20 ஆயிரம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

2010ம் ஆண்டில் அமீர் ஜுபைர் சித்திக் தலைமையிலான பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளின் உத்தரவின் பேரில் உளவு பார்த்ததற்காக தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இதேபோன்ற உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக குறித்த வழக்கில் 2014ம் ஆண்டு அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டார். 

தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களான தமீம் அன்சாரி மற்றும் அருண் செல்வராஜன் ஆகியோர் தமிழ்நாட்டின் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களில் உளவு பார்த்ததாகவும், இதுபோன்ற வகைப்படுத்தப்பட்ட தகவல்களை அமீர் ஜுபைர் சித்திக்கிற்கு அனுப்பியதாகவும், இதனால் இறையாண்மையை அச்சுறுத்தியதாகவும் அடுத்த விசாரணையில் கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

அருண் செல்வராஜன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் இப்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமீம் அன்சாரிக்கு எதிரான வழக்கு தொடர்ந்து வருகிறது.

இதேவேளை தலைமறைவான குற்றம் சாட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த முகமது அன்வர் முகமது சிராஜ் அலி தவிர, பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி அமீர் ஜுபைர் சித்திக் மற்றும் பலர் மீது விசாரணை நடந்து வருகிறது.

No comments