காற்று மூலமே பரவும்?

கொரோனோ வைரஸ் பற்றியே உலகெங்கும் பேசப்படுகின்ற நிலையில் அதன் குணங்குறிகள்,பரவுகைகள் பற்றி வைத்தியகலாநிதி யமுனாந்தா தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் இது பற்றி விபரிக்கையில்  சீனாவைக் காவுகொள்ளும் கோரோனா வைரஸ் நோய்த்தொற்று ஓர் கொள்ளை நோய் போல் உலகெங்கும் பரவும் சாத்தியம் உள்ளது. இது சுவாசத்தின் மூலமும் சீத மென்சவ்வுகளின் மூலமும் பரவக்கூடிய நோயாகும்.



உலகத்தில் அண்மைய யுகத்தில் ஒவ்வொரு 100 வருடங்களுக்கு ஒரு தடவை பெருமளவான மக்களின் உயிரழிவுக்குக் காரணமாக ஒரு தொற்றுநோய் அமைந்ததை அவதானிக்கலாம்.



1720இல் பிளேக்கு நோயும், 1820இல் கொலரா நோயும், 1920இல் ஸ்பானியக் காய்ச்சலும் உலகைக் காவு கொண்டது. அவ்வாறே 2020இல் கோரோனாத் தொற்றும் உலகைப் பாதிக்குமோ என்ற பயம் எல்லோரிடமும் உள்ளது.



எனவே நோய் பரவுவதைத் தடுப்பதற்கும், நோய் ஏற்படின் எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விழிப்பு மிகவும் வேகமாக ஏற்படுத்தப்படல் வேண்டும். நோயுற்றவர்களில் இருந்து இன்னொருவருக்கு இருமல், தும்மல் மூலமும், தொடுகை மூலமும், வாய், மூக்கு, கண் என்பவற்றை அசுத்தமான கைகளினால் தொடுவதனாலும் பரவலாம். மலத்தின் மூலமும் பரவும் வாய்ப்பு உள்ளது.



இந்த நோய்த்தொற்றும் சாதாரண தடிமல் போன்றே இருக்கும். ஆனால் ஒருவரில் இருந்து இன்னொருவர் அல்லது மூவருக்கும் தொற்றும் தன்மை உள்ளது. நோய் அறிகுறி தென்படவே இன்னொருவருக்கு தொற்றும் வாய்ப்பு உள்ளது.



எனவே கோரோனா நோயுள்ள இடங்களில் இருந்து மீள்பவர்கள் இந்நோயின் நோயரும்பு காலமான 14 நாள்கள் பிரத்தியேக இடங்களில் தங்க வைத்தல் ( Quarentine) மற்றும் நோய் அறிகுறிகள் உடையவர்கள் சுயமாகவே ஏனையவர்களுக்குத் தொற்றாது தனிமையாக இருத்தல் (Self Quarentine) என்பன முக்கியமானவை.



நோய்க்கிருமி தொற்றி 2 கிழமை வரையில் நோய் அறிகுறிகளாக தலையிடி, களைப்பு, மூக்கில் இருந்து நீர் சிந்தல், இருமல், தும்மல், தொண்டைநோ, தசைநோ, காய்ச்சல், மூச்செடுத்தல் கடினமாதல் என்பன ஏற்படும்.



நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க, நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல் நல்லது. அடுத்து முகக்கவசம் அணிதல் நல்லது. பொதுவாக சளித்திவலைகள் மூலம் இந்நோய் பரவுவதால் முகக்கவசம் போதிய பாதுகாப்பைத் தரும்.



அடுத்து நோயாளியின் தொடுகையினால் இந்த நோய்க்கிருமி பரவும். எனவே கை தழுவுதல், கட்டியணைத்தல் என்பவற்றைத் தவிர்த்தல் வேண்டும். கைகளைச் சவர்க்காரத்தினாலோ அல்லது அற்ககோலினாலோ சுத்தம் செய்தல் வேண்டும்.





கைக்குட்டையினை உபயோகித்து, எவரெதிலும் தும்மாதும், இருமாதும் இருத்தல் வேண்டும். பொது இடங்களிலும், வைத்தியசாலையிலும் நுண்ணுயிர்க் கொல்லிகளால் துப்பரவு செய்தல் வேண்டும். குளிரூட்டப்பட்ட, காற்றோட்டம் குறைந்த இடங்களில் இந்த நோய்த் தொற்று அபாயம் அதிகம்.



எனவே இத்தகைய இடங்களைத் தவிர்த்தல் வேண்டும். அநாவசியமான சுற்றுலாப் பயணங்களைத் தவிர்த்தல் வேண்டும். அடுத்து பொது மலசலகூடம் மூலமும் இந்நோயத் தொற்று ஏற்படலாம். அடுத்து உணவுகளை போதிய அளவில் வேகவைத்து உண்ண வேண்டும்.



நோயின் தாக்கம் சிறுவர்கள், முதியவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்களில் அதிகம் பாதிக்கும். பொதுவாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் போதிய அளவு நீராகாரம் அருந்த வேண்டும். காய்ச்சலுக்கு பரசிற்றமோல் மருந்தினை உபயோகிக்கலாம். உப்புக்கஞ்சி, பரசிற்றமோல் என்பவற்றுடன் இருமலைத் தணிக்கும் ரேபூட்டலின் மருந்துகளையும் தயார்நிலையில் வைத்திருந்தால், நோயுறும்போது உபயோகிக்கலாம்.



இதனால் நோய் பலருக்குப் பரவுவதைத் தடுக்கலாம். நோய் அறிகுறி கடுமையானவர்களுக்கு முன்காப்புகளுடனான மருத்துவ சிகிச்சை அவசியம். பொதுவாகச் சுவாசச் செயலிழப்பு, வயிற்றோட்டம், சிறுநீரகச் செயலிழப்பு, ஏனைய கிருமித் தொற்று என்பவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அவசியம்.

No comments