நாங்கள் வடகிழக்கு வருவோம்:மனோகணேசன்


கூட்டமைப்பு தெற்கு தேர்தல் களத்தில் இறங்கினால் நாம் வடகிழக்கில் களமிறங்குவோமென முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே போட்டியிடும் சாத்தியம் பற்றி, தமிழரசு கட்சி தலைவர் மாவை எம்பி கூறியிருக்கிறார்.
இது பற்றி ஊடகவியலாளர்கள் என்னிடம் திரும்ப, திரும்ப கேட்கிறார்கள்.
இன்று நேற்றல்ல, பல மாதங்களுக்கு முன்னமேயே, நான் இதுபற்றி "TNA இங்கே வந்து தாராளமாக போட்டியிடட்டும். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது" என கூறியுள்ளேன். இதை எம்பி மாவையிடம் நேரடியாகவே கூறியும் உள்ளேன்.
ஒருவேளை, நம்முடன் இணைந்து போட்டியிட வேண்டுமென அவர்கள் விரும்புவார்களாயின், இது பற்றி அதிகாரபூர்வமாக எமக்கு கூட்டமைப்பு எழுதுமானால் நாம் அது தொடர்பில் எமது அரசியல் குழுவில் கலந்துரையாடி எமது நிலைப்பாட்டை அறிவிக்கலாம்.
அதேபோல், வடக்கு கிழக்குக்கு வெளியே போட்டியிடும் சாத்தியம் கூட்டமைப்புக்கு இருப்பதை போல, வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் சாத்தியம், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இருக்கிறது. இது பற்றியும் நாம் ஆராய்கிறோம்.
எதிர்வரும் பாராளுமன்றத்தில் எப்படி தமிழ் எம்பிக்களின் தொகையை அதிகரிக்கலாம் என்பது பற்றி, கூட்டமைப்புடன் மட்டுமல்ல, அனைத்து அணி தமிழ் கட்சிகளுடனும் நாம் பேச விரும்புகிறோம்.
இதுபற்றி ஜனவரி முதல் வாரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூடி முடிவெடுக்கும்.

No comments