பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது தாக்குதல்; இருவர் கைது!

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு தொழில்நுட்ப கல்வி திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய விசேட கடமையில் ஈடுபட்ட பரீட்சை மேற்பார்வையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எம்.எம். ஹஸன், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையையடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

இதனையடுத்தே குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்ட சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

குறித்த தாக்குதலினால் மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர்கள் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments