நாம் கைகாட்டும் வேட்பாளரை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வடகிழக்கில் பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் கட்சிகளுக்குமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதில் சில முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக நாம் அறிந்தோம்.
அதேவேளை தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையின்மை காரணமாக அதிலே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. எம்மைப் பொறுத்தவரையில் ஒரு நியாயமான அரசியல் தீர்வைப ;பெறுவதற்கான எங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறோம். எமது தலைவர்கள் அது சார்பாக தெளிவாக வலியுறுத்தியிருப்பதாக நான் அறிகின்றேன்.
தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர். அதனை நாங்கள் ஏற்கமுடியாது. எம்மிடமுள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்கு.
அந்த வாக்கை பயன்படுத்திதான் நாம் நியாயமான முடிவைப் பெற வேண்டும். பல துன்பியல்களை எதிர்கொண்ட சமூகம் ஒரு நிரந்தர தீர்வினை எட்டவேண்டும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது ஒரு பிழையான நடவடிக்கையாக நான் பார்க்கின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments