சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் தலைவன் சஜித்

சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய சிறந்த தலைவரென்றால் அது சஜித் பிரேமதாசவே. எனவே அவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சம்பாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் எதிர்நோக்க இருக்கின்ற இந்த ஜனாதிபதி தேர்தலானது, முக்கியமாக இரு வேட்பாளர்களான புதிய ஜனநாயக முன்னனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகிய இருவரில்  ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.
இதில் இனவாதங்களை களையெடுக்கக்கூடிய குறிப்பாக முஸ்லிம் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வேட்பாளரான சஜித் பிரேமதாசாவையே ஆதரிக்க வேண்டும்.
இங்கு நாம், நம்முடைய முஸ்லிம் பிரதிநிதிகளிடம் காணப்படுகின்ற வெறுப்புக்களை மறந்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காக ஒன்று திரள வேண்டிய நிலையில் காணப்படுகின்றோம்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம் சமூகம் அச்சத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும். இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதுடன் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும்.
இன்று பணத்திற்காகவும் பயத்தினாலும் பல முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கோட்டபாய ராஜபக்சவை ஆதரிக்கின்ற நிலையைக் காணலாம்.
கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து என்மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி, என்னையும் அந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தி இந்த பேரினவாத சக்திகள் என் மீது பழிசுமத்தி என்னை கைது செய்யுமாறு கோரியது.
இதனையடுத்து என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் போலியானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எங்களுடைய சமுதாயத்திற்காக எங்கள் தலைகளையும் அர்ப்பணம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் .
மேலும் ஜனாதிபதியை தெரிவுசெய்யுமாறு தன்னை  கூறும்  வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் மக்களது வாக்குகளை வீணாக்கி பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை வெற்றி பெறச்செய்யும் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ளார்.
எனவே அவரது வார்த்தைகளை நம்பி நாம் ஒரு போதும் ஏமாந்து விடக்கூடாது. அத்துடன்  சமுதாயத்தை பாதுகாப்பதற்காக எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்.
இது நாடாளுமன்ற தேர்தலோ மாகாண சபைத் தேர்தலோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலோ அல்ல. மாறாக இது நாட்டின் தலைமையை தீர்மானிக்கும் தேர்தல்.
ஆகவே மக்களாகிய நீங்கள்தான் எமது சமூகத்தின் பாதுகாப்பிற்கு ஏற்ற நாட்டின் தலைமையான சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும்” என மக்களிடம் கோரியுள்ளார்.

No comments