மீராவின் தொடர் கேள்வியால் ஆடிப்போன கோத்தா!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விகளினால் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச பதிலளிக்க திணறிய நிலையில் பதிலளித்துள்ளார்.

இன்று (15) மதியம் சங்ஹரிலா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கேள்வியும் பதில்களும்,

ஊடகவியலாளர் - நீங்கள் இராணுவத்தை வழி நடத்திய போது இராணுவத்திடம் சரணடைந்த மக்களுக்கு என்ன நடந்தது?. அவர்கள் எங்கே?.

கோத்தாபய - நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். நான் இராணுவத்தை வழி நடத்தவில்லை.

ஊடகவியலாளர் - உங்கள் சகோதரர்?♪

கோத்தாபய - இல்லை! இல்லை! ஹ ஹ. இராணுவத்தை வழி நடத்துவது இராணுவ தளபதியே! (அதிகம் சிரிக்கிறார்).

ஊடகவியலாளர் - நீங்கள் பாதுகாப்புச் செயலாளர் எனவே அங்கு இருப்பீர்கள். இந்தக் கேள்வியை மக்கள் கேட்கின்றனர்.

கோத்தாபய - எந்தக் கேள்வி?.

ஊடகவியலாளர் - இராணுவத்திடம் சரணடைந்த மக்களுக்கு என்ன நடந்தது?. அவர்கள் எங்கே?.

கோத்தாபய - 13,784 பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர். புனர்வாழ்வு வழங்கி சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டனர். தவிர அவர்கள் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.

புனர்வாழ்வுத் திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பாராட்டினர். நாங்கள் எவரையும் தடுத்து வைக்கவில்லை.

ஊடகவியலாளர் - இதன் அர்த்தம் யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை ?. யாரும் காணாமல் போகவில்லை ?.

கோத்தாபய - காணாமல் போதல், இராணுவத்திடம் சரணடைதல் இருவேறு இடத்தில் நடந்தது. இராணுவ வீரர்கள், அதிகாரிகள் நான்காயிரம் பேர் காணாமல் போனது உங்களுக்கு தெரியுமா?. போரின் போது இது இயல்பானது. சில நேரம் நீங்கள் யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடியாது. காணாமல் போன நபர்களுக்கும் இதுவே நடந்திருக்கும்.

ஊடகவியலாளர் - ஆனால் கேள்வி!

அவரை மீளவும் கேள்வியை தொடக்க மறுத்த கோத்தாபய - ஆனால், ஆனால் நீங்கள் கேட்பது சரணடைந்த மக்களுக்கு என்ன நடந்தது? சரணடைந்த மக்கள் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர் - மன்னிக்கவும், மீண்டும் அதையே தொடர்கிறேன். சரணடைந்தவர்களில் புனர்வாழ்வு பெற்ற 13 ஆயிரம் பேர் தவிர்ந்த ஒரு பகுதியினர் திரும்பி வரவில்லை என வடக்கில் உள்ள சில குடும்பங்கள் கூறுகின்றன.

கோத்தாபய - இல்லை! சிலர் சொல்கின்றனர். ஆனால் அது தனியே குற்றச்சாட்டு. நாங்கள் விசாரணை செய்தோம். ஆணைக்குழுவை அமைத்தோம். பரிந்துரைக்கப்பட்ட திகதியில் பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பரிந்துரையில் கையளித்ததாக எந்தச் சம்பவமும் இல்லை.

ஊடகவியலாளர் - ஆனால் பரணகம ஆணைக்குழு சரணடைந்தவர்களின் பெயர் மற்றும் திகதிகளை சமர்ப்பித்துள்ளது.

கோத்தாபய - இல்லை!

ஊடகவியலாளர் - ஆம் சேர். அது பரணகம ஆணைக்குழு. எனவே. ஓகே.

இதன்போது இறுதியில் மற்றுமொரு ஊடகவியலாளரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கேள்வியை தொடுத்ததால் கடந்த காலம் பற்றி கேட்க வேண்டாம். எதிர்காலம் பற்றி கேளுங்கள் நான் இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி என்று கோத்தாபய மேலும் கேள்வி கேட்க விடாமல் நழுவிக் கொண்டார்.

No comments