புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் முன்னுரிமை:கோத்தா
நாட்டின் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப இராணுவத்திற்கும் புலனாய்வுத்துறைக்கும் உரிய அதிகாரங்களை வழங்குவதுடன் இந்த நாட்டினை கட்டுப்பாடான நாடாக கட்டியெழுப்பும் வகையில் அதனை பொறுப்பேற்க தயாராகவுள்ளேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி யின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது மேலும் கூறியதாவது.
கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த நாட்டில் பயங்கரவாதம் நீடித்தது. பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாத நிலைமை இருந்தது. அவ்வாறு இருக்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவர் தனது ஆட்சிக்காலத்தில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டினார். அதுமட்டும் அல்ல யுத்தத்தின் பின்னர் இந்த நாட்டில் பல்வேறு முதலீடுகள் குவிந்தது. இலங்கை ஆசியாவின் சிறந்த நாடாக மாற்றப்பட்டது. நாம் கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றினோம்.
ஆனால் கடந்த காலத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து உயரிய அபிவிருத்தி கொண்ட வளர்சியடைத்து வரும் நாடாக கொடுக்கப்பட்ட நாடு இறுதி மூன்று நான்கு ஆண்டுகளில் மீண்டும் பழைய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனினும் நாம் மீண்டும் இந்த நாட்டினை பொறுப்பேற்க தயாராக உள்ளோம். இந்த நாட்டினை பாதுகாப்பான நாடாக மட்டுமல்ல ஒழுக்கமான சட்டம், ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்கும் நாடாவும் மாற்ற வேண்டும்.
அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டில் இராணுவத்திற்கு உரிய அதிகாரங்களை கொடுத்து, புலனாய்வு துறைக்கான சரியான அதிகாரங்களை கொடுத்து இந்த நாட்டினை பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டும்.
இராணுவத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். அதை விடுத்தது புதிய லிபரல் கொள்கை கொண்டவர்களின் மூலமாக இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியாது. இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் அதில் இராணுவத்திற்கான பங்கு அதிகமாக இருக்க வேண்டும். எம்மால் மட்டுமே இந்த நாட்டினை கட்டியெழுப்பவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேபோல் இந்த நாட்டின் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் விவசாயத்தை கட்டியெழுப்புவதுடன் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து அதன் மூலமாக எமது ஏற்றுமதியை நாம் அதிகரிப்போம். அத்துடன் கல்வித்துறையில் பாரிய புரட்சியை நாம் செய்வோம். தகுதியான சகல மாணவர்களுக்கும் தகவல் தொழிநுட்ப அறிவுசார் கற்கையை உருவாக்குவதுடன் எமது இளம் சமூகத்தை இடை நடுவே கைவிடாது இறுதிவரை சரியான எதிர்காலத்திற்கு கொண்டுசெல்ல நாம் நடவடிக்கை எடுப்போம். இதன் மூலமாக எமது பொருளாதார கொள்கையை நாம் பலப்படுத்துவோம் என்றார்.
Post a Comment