யாழில். முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் - 5 பவுண் நகை கொள்ளை ; கணவன் மனைவி மீதும் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் முகமூடி கொள்ளையர்களினால் வீடு புகுந்து ஒரு தொகை நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு , மணற்காடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முகமூடி கொள்ளையர்கள் மூவர் , வீட்டினுள் அத்துமீறி நுழைந்து , வீட்டின் உரிமையாளர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு அவரை கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய பின்னர் , அவரது மனைவியின் சுமார் 5 பவுண் தங்க நகைகளை கத்தி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த வீட்டு உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அதேவேளை வீட்டின் உரிமையாளர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்ட வேளை வீட்டின் உரிமையாளரும் கொள்ளையர்களை திருப்பி தாக்கியதில் கொள்ளையன் ஒருவன் காயங்களுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளது , அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கும் , பொலிஸ் அவசர சேவை பிரிவினருக்கும் அறிவித்த போதிலும் , பொலிஸார் சுமார் 08 மணி நேர தாமதத்திற்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Post a Comment