போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரான் முன்மொழிவு குறித்து டிரம்ப்புக்குச் சந்தேகம்
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான தெஹ்ரானின் சமீபத்திய முன்மொழிவு குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சந்தேகங்களை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ஈரான் மீதான தனது முற்றுகையை நீக்கினால், போரை முடிவுக்குக் கொண்டுவந்து ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாக ஈரான் தலைமை முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவு, இஸ்லாமியக் குடியரசின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஒத்திவைக்கும்.
அமெரிக்க அதிபர் அந்தத் திட்டத்தை அடியோடு நிராகரிக்கவில்லை ஆனால் ஈரானியத் தலைமையின் நேர்மையைக் கேள்விக்குட்படுத்தினார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரண்டு பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான தாமதமும் ஏற்பட வாய்ப்பில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, திங்களன்று ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அமெரிக்காவிடம் அளித்த முன்மொழிவு குறித்து அவர் கூறுகையில், அவர்களை இதைச் செய்து தப்பிக்க விட முடியாது. செய்யப்படும் எந்தவொரு ஒப்பந்தமும், எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் அணு ஆயுதத்தை நோக்கி விரைந்து செல்வதை உறுதியாகத் தடுப்பதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்குமாறும், அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியைக் கைவிடுமாறும் ஈரானிடம் வாஷிங்டன் கோருகிறது. அணுகுண்டு தயாரிப்பதை தெஹ்ரான் மறுத்தாலும், யுரேனியம் செறிவூட்டல் உட்பட ஒரு குடிசார் அணுசக்தித் திட்டத்திற்கான தனது உரிமையை அது வலியுறுத்துகிறது.

Post a Comment