காவல்துறை படுகொலை:வெளிக்கும் உண்மைகள்


விடுதலைப்புலிகளது முன்னாள் போராளிகளால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை படுகொலை உண்மைகள் வெளிக்கத்தொடங்கியுள்ளது.
வவுணதீவு சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக, ஹயாத்து மொஹம்மது அஹம்மட் மில்ஹான் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புதிய காத்தான்குடி, FC வீதியைச் சேர்ந்த 30 வயதான மில்ஹான், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மத்திய கிழக்கிலிருந்து இன்றையதினம் (14) குற்றப்புலனாய்வு பிரிவினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவராவார்.
மில்ஹான் உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள், ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற  தாக்குதல் சம்பவம் தொடர்பில் மத்திய கிழக்கிற்கு சென்று ஒழிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மில்ஹான், ஸஹ்ரானின் மிக நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, கடந்த வருடம் நவம்பர் மாதம், மட்டக்களப்பு, வவுணதீவு சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த ஐவரும் குற்றப் புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையின் கீழான குழுவினரால் கைது செய்யப்பட்டு, சவூதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து  UL282 எனும் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் தற்போது, கொழும்பு குற்றப் பிரிவில் (CCD) தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, குறித்த ஐவர் உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் 102 பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அதில் 77 பேர் குற்றப் புலனாய்வு பிரிவிலும் (CID) 25 பேர் தீவிரவாத விசாரணை பிரிவிலும் (TID) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments