முடிவுக்கு வந்தது மருதங்கேணி உணவு தவிர்ப்புப் போராட்டம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்தும், நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் நேற்று   வைத்தியசாலை முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட உணவுதவிர்ப்புப் போராட்டம் இன்று தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.

01) மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் தொடர்சியாக  24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்.

02) மருதங்கேணியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தொடர்ந்து சேவை வழங்க வேண்டும்.

03) நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் தங்களது சேவை தொடர வேண்டும்,  அல்லது  புதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.

04) நோயாளர் காவு வண்டி புதிதாக வழங்கப்பட வேண்டும். 

ஆகிய கோரிக்கையை முன்வைத்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை முன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நேற்று வே.பிசாந்தன் ஆரம்பித்தார். அவரது ஊர் மக்கள் பலரும் கை கோர்த்து  போராட்டத்தை வலுப்படுத்தினர்.

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில், இன்று மருதங்கேணி பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரனின்  போராட்டம் நடத்திவருபவர்களை நேரில் சென்று கலந்துரையாடி தனது ஆதரவையும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்களது கோரிக்கைகளை முப்பது நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடைமுறைப்படுத்த ஆவண செய்வதாக பிரதேச செயலர் வழங்கிய வாக்குறுதியை அடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக இன்று மாலையுடன் முடித்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இறுதியாக பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்களுக்கு குளிர்பானம் வழங்கி போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.

No comments