காப்புறுதி நிறுவன முகாமையாளரின் கொலை - அதிர்ச்சி தரும் பின்னணி

காப்புறுதி நிறுவன முகாமையாளரைக் கொலை செய்யப்போகின்றேன் என சந்தேகநபர் தனது மனைவியிடம் முதல்நாள் தெரிவித்துவிட்டே மறுநாள் அவரை கொலை செய்தார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார்.

வவுனியாவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்யப்பட்டார்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனைவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குறிப்பிட்டு  அந்த நபரை வெட்டியுள்ளார்.

சம்பவத்தையடுத்து கொலை செய்தார் என்று தேடப்பட்ட சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்குத் திரும்பும்வேளை விமான நிலையப் பொலிஸாரால் கடந்த புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துவந்த பொலிஸார்,  கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேகநபரை மேலும் 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கேட்டனர். நீதிமன்று அனுமதித்தது.

அதனடிப்படையில் இரண்டு நாள்கள் தடுத்துவைத்து சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், அவரது அலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன.

“எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிறேமரமணன் எனது நீண்டநாள் நண்பர். அதனால் எனது மனைவியை அவரது காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்ற அனுப்பிவைத்தேன்.

கிளிநொச்சியில் சீரான தொழில் வாய்ப்புக் கிடைக்காத்தால் பகறின் நாட்டுக்கு தொழில் தேடிச் சென்றுவிட்டேன். நான் வெளிநாடு சென்றதும் எனது மனைவியுடன் பிறேமரமணன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார்.

அவர்களது தொடர்பு அண்மைக்காலமாக மிகவும் நெருக்கமடைந்தது. எனது மனைவியுடன் தகாத உறவில் இருக்கும் ஒளிப்படங்கள், காணொலிகளை எனக்கு அனுப்பிவைத்து பிறேமரமணன் என்னை மிகவும் மன உளைச்சலுக்குள்ளாக்கினார். எனது நண்பனான அவரை நான் பல தடவைகள் எச்சரித்தும் மன்றாடியும் பேசியிருந்தேன்.

எனது குடும்பத்தை சீரழிக்காதே, மனைவியை விட்டு விலகிவிடு என்று அவரிடம் கடைசிவரைக்கும் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் என்னை கோபமூட்டும் வகையிலான ஒளிப்படங்கள், காணொலிகள், குரல்பதிவுகளைத் தொடர்ச்சியாக அனுப்பிவைத்தார்.

அதனால் நாடு திரும்பிய நான், பிரேமரமணனை சந்திக்கப் போகின்றேன் என எனது மனைவிக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினேன்” என்று சந்தேகநபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் சந்தேகநபரின் மனைவி, அக்கராயன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, தனது கணவர் பிறேமரமணனைக் கொலை செய்யப் போகிறார் எனத் தெரிவித்துள்ளார். எனினும் கொலை இடம்பெற்ற பின்னர் தான் அவ்வாறு சொல்லவில்லை என்கிறார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொலை செய்யப்பட்டவரால் சந்தேகநபருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஒளிப்படங்கள், காணொலிகள், குரல்பதிவுகள் சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments