கொழும்பை முடக்க ஒரு இலட்சம் பேரைத் திரட்டுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

கொழும்பில் அடுத்த வாரம் ஒரு இலட்சம் பேரைக் குவித்து, பாரிய பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பொருட்படுத்தாமல், இந்தப் பேரணியை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து ஒரு இலட்சம் பேரைக் கொண்டு வந்து, கொழும்பில் குவித்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பேரணி நடத்தப்படவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க மறுத்து வரும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கே, ஐதேக இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சிறிலங்கா அதிபரின் வதிவிடம், செயலகம் என்பனவற்றை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, எதிர்வரும் 12ஆம் நாள் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகத் தெரிவு செய்யும், தீர்மானத்தை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

No comments