இடைக்கால நிவாரணம் வன்னி மக்களிற்கு தீர்வாகாது!


கடந்த காலங்களில் போரின் நிமித்தம் மோசமாகப்பாதிக்கப்பட்டு அவற்றின் தாக்கங்களில் இருந்து விடுபட முன்னர் இயற்கையின் சீற்றம் மீண்டும் எம் மக்களுக்குத்துன்பத்தைக்கொடுத்திருப்பது எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யுத்தகாலங்களில் பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்தது போல மீண்டும் பல்லாயிரக்கணக்கில் அவர்கள் இடம்பெயர நேர்ந்துள்ளது.  தமக்குக்கிடைத்த சொற்ப உதவிகள் மூலம் சிறுகச்சிறுக அவர்கள் கட்டி எழுப்பிய வாழ்வாதார செயற்பாடுகளை மழைவெள்ளம் சின்னாபின்னமாக்கியுள்ளதாக அறிந்து மனவருத்தம் அடைந்தோம். அவர்கள் துயரங்களைத்தீர்ப்பதற்கு எம்மால் முடிந்தளவுக்கு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னிக்கு விஜயம் செய்த அவர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேலும் உலர் உணவுகளை வழங்க உத்தேசித்துள்ளோம். தற்காலிகமான அவர்களின் இன்றைய நிலையைக்கடந்து செல்லவே எமது நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் நிவாரணங்களுடன் நின்றுவிடாமல் அவர்கள்தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலைவரவேண்டும்.அதற்குதன்னம்பிக்கைஅவசியம். சுய முயற்சிகளால் உயரவேண்டும் என்று அவர்கள் நினைப்பது அவசியம்.

இப்போது ஏற்பட்டுள்ள இந்தவெள்ளம் காரணமாகபெரும் தோற்றுநோய்,தொற்றாநோய் ஆபத்தும் சுகாதாரச்சீர்கேடும்  ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. இதுதொடர்பில் பல்கலைக்கழக மருத்துவபீடமாணவர்கள் மற்றும் மருத்துவர்களுடன்  ஆலோசனை நடத்தி எத்தகைய முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஆராயவிருக்கின்றோம்.

அடுத்துமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் விவசாயம் அழிவடைந்துவிட்டது. கால் நடைகள் இறந்துவிட்டன. வாழ்வாதாரங்கள் தடைப்பட்டுள்ளன. சுpல குடும்பங்களுக்கேனும் உலர் உணவுகள் கொடுத்திருப்பது தற்போதைய அவர்களின் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காகவே.இந்நிவாரணப் பணியில் யாழ் பல்கலைக்கழக மாணவ மாணவியரும் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து தங்கள் சேவையை வழங்கிவருகின்றார்கள். அத்துடன் தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சிமாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அணியும் தங்கள் சேவையைவழங்கிவருகின்றார்கள் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments