சிறுத்தை அடித்துக் கொலை - 10 பேருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்தொடர்பான சந்தேகநபர்கள் 10 பேருக்கும் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 07 பேரும் இன்று (29) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அது தவிர இச்சம்பவம் தொடர்பில் மேலும் 03 சந்தேகநபர்கள் நீதிமன்றில் சரணடைந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் 10 பேரையும், எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் 21 ஆம் திகதி, கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்திற்குள் புகுந்த சிறுத்தையொன்று 10 பேரை காயப்படுத்திய நிலையில், ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் அதனை அடித்துக் கொலை செய்திருந்தனர்.
இதனையடுத்து, அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தொடர்பில் ஆராய்ந்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments