யாழ். பல்கலை கலைப்பீடத்தின் ஆறாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ஆறாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
"புதுமையான பார்வைக் கோணங்களை உருவாக்குதல்: அர்த்தமுள்ள மாற்றத்தை நோக்கிய இளங்கலை ஆய்வுகள்" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், மாநாட்டுக்கு கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நா.பிரதீபராஜா தலைமை தாங்கவுள்ளார்.
மாநாட்டின் திறப்புரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணணி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இ.வை.ஏ.சார்ள்ஸ் வழங்கவுள்ளார்.
கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களின் ஆய்வுத் திறன்கள், புதிய சிந்தனைகள் மற்றும் அறிவுசார் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் முக்கியமான கல்விசார் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்துள்ளது.
ஆய்வு மாநாட்டின் ஊடாக இளங்கலை மாணவர்கள் தமது ஆய்வுக் கண்டுபிடிப்புகள் மற்றும் சிந்தனைகளை கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். மாணவர்களின் ஆய்வுகள் பல்வேறு கல்விசார் அமர்வுகளில் முன்வைக்கப்பட்டு, துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துப் பரிமாற்றத்திற்கும் கலந்துரையாடலுக்கும் உட்படுத்தப்படவுள்ளன.
மாணவர்களின் ஆய்வுச்சுருக்கங்கள் ஆய்வடங்கல் மூலமாக வெளியிடப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Post a Comment