தேசிய மக்கள் சக்தி :ஊடகவியலாளர் விசாரணைக்கு?

 




தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச சபை தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பிரதேசசபை செயலாளர் இடமாற்றம் தொடர்பான சர்ச்சை குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கும், அவர் சார்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதேசத்தில் கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாக தெரிவித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் காவல்; நிலையத்தில் ஊடகவியலாளர் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதற்கமைய, காவல்நிலையத்திற்கு சென்ற ஊடகவியலாளர்; தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 29ம் திகதியன்று காலை 10 மணிக்கு மீண்டும் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தவிசாளர் தாமே தனது தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை வட்சப் குழுவில் பகிர்ந்த பின்னரே அது வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்திருப்பது ஊடக அடக்குமுறைக்கான விடயமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


No comments