பலாலி பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம் - தமிழ் சட்டத்தரணிகள் ஓரணியில் திரண்டு முன்னிலையாக வேண்டும் என கோரிக்கை


வலி. வடக்கு பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி போலீசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . 

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது. 

அதன் போது, பிரதேச சபைக்கு சபைக்கு சொந்தமான வீதியினை தையிட்டி விகாராதிபதி அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில் , அதனை விடுவிக்க முயற்சித்த பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளருக்கு எதிராக பலாலி பொலிஸார் மல்லாகம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூட சம்பந்தமே இல்லாதது நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார். 

இவ்வாறான விடயங்கள் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பிரதேச சபைக்கு பொலிஸார் விடுக்கும் அச்சுறுத்தலாகவே இதனை நாம் கருத வேண்டும். 

தையிட்டி விகாரை சட்டவிரோதமானது. என அறிவித்தல் பலகையை நாட்டுவதற்கு பிரதேச சபையில் நாம் தீர்மானம் எடுத்திருந்த போதிலும் , அதற்கும் பலாலி பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு தடையேற்படுத்தி இருந்தனர். 

தற்போது வீதியினை விடுவிக்கும் முயற்சிக்கும் தடையேற்படுத்தி நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். 

சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாது தடையேற்படுத்திக வருவதுடன் , நீதிமன்றில் வழக்குகளும் தொடர்ந்து வருகின்றனர். 

இவ்வாறான பலாலி பொலிசாரின் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த நிலையில் ,  சபையில் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதேவேளை , தீர்மானங்களை மாத்திரம் எடுத்து விட்டு காலம் கடத்தாது உடனடியாக சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து , நீதிமன்றில் பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து விரைவான நடவடிக்கையை தவிசாளர் எடுக்க வேண்டும் எனவும் , இவ்வாறான விடயங்களுக்கு தமிழ் சட்டத்தரணிகள் பேதங்கள் இன்றி ஓரணியில் திரண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் சபையில் உறுப்பினர்கள் கோரி இருந்தனர். 

No comments