யாழ்.பொலிஸ் நிலையம் அருகில் வாள் வெட்டு - இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வன்முறை கும்பலின் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த வன்முறை கும்பல் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பியோடி காயங்களுடன் இளைஞன் கடலில் குதித்ததை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்த யாழ்ப்பாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயங்களுடன் கடலில் விழுந்த இளைஞனை மீட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தாக்குதலாளிகள் தப்பி செல்லும் காணொளிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் காணொளிகளை பெற்று அதன் அடிப்படையில் தாக்குதலாளிகளை இனம் கண்டு கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை முற்பகை காரணமாகவே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment