திருமலையில் பிணையில்லை!



திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான வழக்குகளை விலக்கிக்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் நகர்வுகளை முன்னெடுத்த போதிலும் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி வழக்கின் போது மன்றிற்கு சமூகமளிக்காதிருந்த எதிராளிகளில் ஒருவரான சுதிப்ப லியனகே இன்று சமூகமளித்திருந்த நிலையில் அவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொட வனவாசி காசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், புதன்கிழமை (14) அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், வழக்கு, திங்கட்கிழமை (19) இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே   விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது


No comments