தமிழ் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்: வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்


எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் குறித்த சங்க பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதே சங்கத்தினர் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி என்பது எமக்கான அதிகாரங்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பு. இதை எமது தமிழ் தேசியத்தில் இருக்கும் ஒரு தரப்பினரே ஆளுகை செய்ய வேண்டும்.

தமிழ் தேசியத்தின் வலிமையை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்கள் காண்பிக்க வேண்டும்.

தென்னிலங்கையின் கட்சிகளின் பிரதிநிதிகள், அவர்களால் இறக்கப்பட்டுள்ள சுயேச்சைக் குழுக்கள் போன்றவை எம்மை மீண்டும் ஏமாற்றவே முயல்கின்றன. இவர்களை இனியும் நம்ப முடியாது.

இதை விட வடக்கில் தென்னிலங்கை கட்சிகளின் நலன்களை நிலைநாட்ட எமது சிலர் அக்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எமது இருப்பை இல்லாதொழிக்க முயல்வது வெட்கக்கேடான விடயமாகும்.

எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என மேலும் தெரிவித்தனர். 

No comments