13:காவல்துறை அதிகாரமில்லாமல் தேவையில்லை?



காவல்துறை அதிகாரமின்றி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமை ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை தமிழ் மக்களிடையே தருமென அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே அதனை முற்றாக நிராகரிப்பதாகவும், அது ஒருபோதும் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வாக அமையாது எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை காவல்துறை அதிகாரமின்றி, மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட வேறு பல அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பந்தன் பிளவுபடாத, ஒருமித்த இலங்கைக்குள் அரசியல் தீர்வினைக் கோரியதாக ஜனாதிபதி கூறுகின்றார். இருப்பினும் அவர் பிளவுபடாத இலங்கைக்குள் தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்கக்கூடிய, சுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வையே கோரினார்.

மாறாக அவர் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை. அவ்வாறிருக்கையில் காவல்துறை அதிகாரங்களின்றி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி கூறுகின்றார். 

மேலும் தமிழ் மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து, சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்யக்கூடிய விதத்தில், சமஸ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து இதயசுத்தியுடன் பேசுவதற்கு ஜனாதிபதி எம்மை அழைத்தால், அப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு தமிழரசுக்கட்சி தயாராக இருக்கின்றதென சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.


No comments