மயிலத்தமடு போராட்டம்:200வது நாள்!
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 200வது நாளை பூர்த்திசெய்யும் நிலையில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் உட்பட பெருமளவான சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
சித்தாண்டி முச்சந்தி விநாயகர் ஆலயத்திலிருந்து கவனயீர்ப்பு ஊர்வலம் ஆரம்பமாகி சித்தாண்டி மகா வித்தியாலயம் வரையில் வருகைதந்ததுடன் அங்கு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக அத்துமீறல்களை முன்னெடுத்துவரும் நிலையில் இதுவரையில் அவற்றினை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.
அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியபோதிலும் இது தொடர்பில் தமது மேய்ச்சல் தரையினை மீட்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையெனவும் இங்கு பண்ணையாளர்களினால் கவலை தெரிவிக்கப்பட்டது.
Post a Comment