மீனவர்கள் நிலை கவலைக்கிடம்!

 




இந்திய மீனவர்களது அத்துமீறல்களிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே யாழ் மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களில் ஒருவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ வரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக இலங்கை கடற்றொழில் அமைச்சரும் ஒதுங்கிக்கொண்டுள்ள நிலையில் மீனவர்களது போராட்டம் தொடர்கின்றது.


No comments