டக்ளஸ் யாழ்ப்பாண கல்வியை நாசமாக்குகிறார்!



யாழ்ப்பாண கல்வியினை நாசமாக்கும் தலையீடுகளை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைவிடவேண்டுமென மற்றொரு அரச நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கின் மூத்த பாடசாலைகளில் ஒன்றாகவும், நீண்ட கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பாரம்பரியத்தைக் கொண்டதுமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியானது, தற்போது அதிபர் நியமன விவகாரத்தில் சிக்குண்டு தவிப்பது கவலைக்குரியதாகும்.

கல்வி அமைச்சினால் தேசிய பாடசாலைகளுக்கென தரங்கள் வகுக்கப்பட்டு, அதன்படி நிர்வாக சேவைகள் முன்னெடுக்கப்படுகிறது. இது தேசிய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

அதன்பிரகாரம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் வெற்றிடத்துக்காக பொதுச் சேவை ஆணைக் குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் ஒரு அதிபர் தெரிவாகி, அவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது கல்லூரியின் பதில் அதிபராக கடமையாற்றுபவர் தனது பொறுப்புகளை புதியவரிடம் கையளிக்காமல், தொடர்பு எல்லைக்கு அப்பால் ஒளிந்து கொண்டுள்ளார்.

அவரது ஒளிவு மறைவுகளுக்கு பின்னணியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரசாங்க தரப்பு அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா இருக்கிறார் என்பது அவரது அண்மைய அறிக்கை ஊடாக தெளிவாகியுள்ளது.

இதுவரைகாலமும், குறித்த அரசியல்வாதியின் தலையீடு பற்றி வெறும் பேச்சுகளே இருந்தநிலையில், அவர் கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியும் இப்போது தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த துறைசார்ந்த அமைச்சர்கள் இருக்கும்போது, கல்வித்துறைக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு துறையின் அமைச்சராக இருந்துகொண்டு ”பழைய மாணவர்” என்ற அந்தஸ்தில் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவது யாழ்ப்பாணத்தின் கல்வித்தளத்தை கேலிக்குள்ளாக்குவதாகவே அமைகிறது. 

அத்துடன் அரசியல் வாதியாக இருக்கும் பழைய மாணவரின் அழுத்தத்தால் கல்லூரி நிலைகுலைவது என்பது அக்கல்லூரிக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இதை கல்லூரி சமூகமும், நலன்விரும்பிகளும், ஏனைய கல்விச்சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் மட்டுமல்லாது, இதர பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றங்கள் சார்ந்தும் நிலவும் அரசியல் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாகவும், பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்துக்கு மாவட்டத்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எடுத்துச் செல்வது எனது பொறுப்பாக அமைகிறதெனவும் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.


No comments